Wednesday, 18 July 2012

ஷோபா என்ற தேவதை...

ஷோபா


-பாலுமகேந்திரா

ஷோபா பற்றி எழுத உட் கார்ந்த ஒவ்வொரு தடவையும், உணர்ச்சிவசப்பட்டு அழுதேனே தவிர ஒரு வரி எழுதமுடியவில்லை.
இன்று மறுபடியும் உட்காருகிறேன். ஞாபகங்கள் மீண்டும் கண்ணை நனைக்கின்றன. எழுந்து முகம் அலம்பிவிட்டு எழுதத் தொடங்குகிறேன்.

தேவலோகத்திலிருந்து, பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்துபோன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது.? எதை எழுதுவது..?

அடுத்த வீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம்கொண்ட ஷோபா ஓர் அற்புதமான நடிகை என்பதையா... நடிப்பில் மிகுந்த தனித்தன்மையையும், தனக்கே தனக்கென்று நிறையப் பிரத்யேக கதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா...
குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசைக் கொண்டு சதா வியப்பும் பிரமிப்புமாகப் பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா...

அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்தி, பின் பட்டென்று பறந்துபோன அந்த சோகத்தையா...
எதை? எதை எழுதுவது..?

மிக அடர்த்தியான உணர்வுகள், முட்டி மோதும் சமயங்களில் வார்த்தைகள் காணாமல் போய்விடுகின்றன. நாம் தலையில் வைத்துக் கொண்டாடும் நமது தமிழ் நம்மை ‘அம்போ’ என்று விட்டு விலகிக்கொள்கிறது...
இந்த நிலையில், எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக்கொள்கிறேன்...
மழைக்கால காலைப் பொழுது. குளித்து, பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளை பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டி ருந்தார். அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் ஏதோ படித்துக்கொண் டிருந்தேன்...
அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது.
அதில் ஒரு கேள்வி:
“மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே... எப்படி இது?
ஷோபா சொல்லியிருந்த பதில்:
“மற்றவர்கள் என்னைக் காமிரா, லைட்ஸ் மற்றும் பிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னை காமிரா, லைட்ஸ், பிலிம் இந்த மூன்றோடும் நிறைய அன்பையும், நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்...

எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பான்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தை பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழவைத்தது...
தேவலோக வாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒரு தடவைதான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதைதான் ஷோபா.

ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருப்பைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்துபோன ஒரு எரிநட்சத்திரம்.
அந்த தேவதையின் வரவையும், மறைவையும் அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்குச் சொல்லியிருந்தேன் ‘மூன்றாம் பிறை’ படம் மூலமாக.
மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே...

நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன்... அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன்!

ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன... இது உங்களுக்கு...
எனக்கு எல்லா இன்னல் களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்..

நன்றி : த சன்டே இந்தியன்
http://www.thesundayindian.com/ta/story/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88/6/1071/

Saturday, 14 July 2012

நகுலன்

நகுலன் கவிதைகள் 

1.
நான்
சரி
நான் மாத்திரம்
சரியே சரி.


2.
"இப்போழுது
அங்குதான்
இருக்கிறீர்களா?"
என்றுகேட்டார்"
எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்"
என்றேன்.

3.
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ப்ளாஸ்க்
நிறைய அய்ஸ்
ஒரு புட்டி
பிராந்தி
வத்திபெட்டி/ ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவத்ற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

4.
நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால்,
என்னால் வர முடியாது!’’

5.
எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புத்தகத்தில் எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

6.
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

7.
என்னைப்
பார்க்கவந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!


8.
யாருமில்லாதபிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

9.
நீயிருக்கநானிருக்க
நேற்று இன்று நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

10.
உன்னையன்றி
உனக்கு
வேறுயாருண்டு?

11.
ஆர்ப்பரிக்கும்
கடல்அதன் அடித்தளம்
மௌனம்
மகா மௌனம்!

12.
முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை
ஞானம்!

13.
வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’ என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறுஎல்லாம் தெரியும்’’என்றேன்!

14.
ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை.

15.




எனக்கு
யாருமில்லை
நான் கூட..